×

போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறி

ஈரோடு, நவ. 12: போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நேற்று மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பள்ளி குழந்தைகளுடன் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: சத்தியமங்கலம் தாலுகா சிக்கரசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கரசம்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் தற்போது 160 பள்ளி குழந்தைகள் படித்து வருகிறார்கள். ஆனால், இங்கு ஒரு தலைமை ஆசிரியர், ஒரு வகுப்பாசிரியர் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள்.
கடந்தாண்டு இந்த பள்ளியில் 120 குழந்தைகள் இருந்தனர்.

ஆனால், இந்தாண்டு பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. 30 குழந்தைகளுக்கு 2 ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.  அதன்படி, இந்த பள்ளிக்கு 5 ஆசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், தலைமை ஆசிரியர் தவிர ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருக்கிறார். போதிய ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளி குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. இதுதொடர்பாக, பலமுறை முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிக்கரசம்பாளையம் தொடக்கப்பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : teachers ,
× RELATED கல்வி அதிகாரி நேரடி விசாரணை...