கோவை, நவ.12: கோவை அமிர்தா பொறியியல் கல்லூரி சார்பில் தன்னிறைவான நிலையான மேம்பாடு என்ற தலைப்பில் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 53 பள்ளிகளை சேர்ந்த 463 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் கோரக் மாத்யூ துவக்கி வைத்தார். என்.எஸ்.ஓ-2019 கன்வீனர் சசோதாரர் ஆனந்த் ஷெனாய் சிறப்புரையாற்றினார். இறுதி போட்டிக்கு 87 அணிகள் தகுதி பெற்றன. நேர்த்தியான சுகாதாரம், ரோபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல் மேலாண்மை, பன்னோக்கு போக்குவரத்து அமைப்பு, மரபுசாரா எரிசக்தி போன்ற தலைப்புகளில் இடைநிலை வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர் பிரிவில் போட்டிகள் நடந்தது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையை கண்டுபிடிக்க ஊக்குவிக்கப்பட்டனர். இதில் 29 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.