கோவை, நவ.12: ஐக்கிய நாடுகள் சபை 2019ம் ஆண்டை தனிம வரிசை அட்டவணையின் 150வது ஆண்டாக அறிவித்தது. இதை கொண்டாடும் விதமாக கோவை காளப்பட்டி என்.ஜி.பி பள்ளியில் மாநில அளவிலான சர்வதேச தனிம வரிசை அட்டவணை போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35 பள்ளிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். இதையொட்டி நடந்த விழாவிற்கு கோவை மருத்துவமனை தலைவர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். பன்னாட்டு தனி மற்றும் வேதியியல் ஒன்றியத்தின் தேசிய பிரதிநிதியான பிபுள் பிகாரி சஹா சிறப்பு விருந்தினராக பங்கேற்று தனிம வரிசை அட்டவணை குறித்த பல்வேறு தகவல்களை மாணவர்களிடம் விளக்கி பேசினார். தனிம வரிசை அட்டவணையின் சித்தரிப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றின் மாதிரி வடிவங்களை செய்து விளக்குதல், 118 தனிமஙகளை ஒப்புவித்தல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது. தனிம வரிசை சித்தரிப்பு போட்டியில் நீலகிரி குருகுலம் பள்ளியும், அட்டவணை முக்கியத்துவ போட்டியில் என்.ஜி.பி பள்ளியும், ஒப்புவித்தல் போட்டியில் ஈரோடு ஸ்ரீநேஷனல் பள்ளியும், வினாடிவினா போட்டியில் கோத்தகிரி செயின்ட் ஜூட்ஸ் பள்ளியும் முதலிடம் பெற்றன. இந்த நிகழ்ச்சியில் கோவை மருத்துவமனை அறங்காவலர் அருண், என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் தாளாளர் தவமணி, கல்வி திட்ட இயக்குனர் மதுரா, முதல்வர் பிரீத்தா பிரகாஷ் மற்றும் பல்வேறு பள்ளிகளின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.