திருச்சி, நவ.12: திருச்சி மாவட்டம், பிகே அகரம் பிரிவு ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் மணல் ஏற்றிய 7 லாரிகள் நிற்பதாக சனமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி சதீஸ்குமார் கடந்த அக்டோபர் 17ம் தேதி சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். அப்போது 7 லாரிகளில் தலா 6 யூனிட் மணல் அரசு அனுமதி இல்லாமல் அரியலூர் மாவட்டம் திருமானூர், கொள்ளிடம் ஆற்றில் இருந்து திருட்டு தனமாக ஏற்றி சென்னை கொண்டு செல்ல இருப்பதாக தொியவந்தது. மேலும் தொடர்ந்து மழை பெய்ததால் லாரியை பெட்ரோல் பங்க் பின்புறம் நிறுத்தியதாக தெரிவித்தனர். இது குறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் விஏஓ புகார் அளித்தார். இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் வினிஸ்(24), ஜெகன் (33), பிரசாத் (25), விஜயராகவன்(42), மோகன்(35) ஆகிய ஐந்து நபர்கள் தொடர்ந்து திருட்டு மணல் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்கள் ஐந்து பேரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.