×

தஞ்சை பெரிய கோயிலில் இன்று பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசியால் அன்னாபிஷேகம்

தஞ்சை, நவ. 12: தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு 1,000 கிலோ பச்சரிசியால் அன்னாபிஷேகம் இன்று நடக்கிறது.மாமன்னன் ராஜராஜசோழனால் 1,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி நாளன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெறும். அதன்படி இந்தாண்டு ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்காக பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 1000 கிலோ காய், கனிகளும் வழங்கப்படவுள்ளன. பக்தர்கள் வழங்கிய பச்சரிசி சாதம் தயார் செய்து மாலையில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.பின்னர் பலவகை காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெறும். பெருவுடையாருக்கு சாத்தப்பட்ட அன்னத்தை பொதுமக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதேபோல் தஞ்சையில் உள்ள கொங்கனேசுவரர் கோயில், காசி விசுவநாதர் கோயில், வெண்ணாற்றங்கரை தஞ்சபுரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடக்கிறது.


Tags : Tanjay Periya Temple ,
× RELATED தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம்...