சென்னை: போரூர் ஏரி பகுதியில் உள்ள உயரழுத்த மின் கோபுரத்தின் மீது வாலிபர் ஒருவர் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுப்பதாக, போரூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, அந்த வாலிபரை கீழே இறங்கும்படி தெரிவித்தனர். ஆனால், அவர் மது போதையில் இருந்ததால் கீழே இறங்க மறுத்து விட்டார். இதையடுத்து, நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் டார்வின், தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் நைசாக பேச்சு கொடுத்தபடி மின் கோபுரத்தின் மீது ஏறி, அவரிடம் நீண்ட நேரமாக பேசி, அவரது மனதை மாற்றி கீழே இறங்க வைத்தார். விசாரணையில் போரூர் சிவன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்லபாண்டி (32) என்பதும், வெல்டிங் வேலை செய்து வருவதும் தெரிந்தது.