வேலூர், நவ.8: வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பெயரளவிற்கு மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவிகள் செயல்படுவதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 4.64 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளது. இந்த விபத்துகளில் 4.70 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். 1.48 லட்சம் பேர் பலியாகி இருப்பதுதான் அதிர்ச்சியான தகவல். இந்தியாவில் தினமும் 405 பேர் சாலை விபத்துகளில் உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் இருந்தாலும், சாலை விபத்துகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான விபத்துகளுக்கு அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, தவறான பாதையில் செல்வது, கவனக்குறைவு உள்ளிட்டவை காரணமாக இருக்கிறது. இதனால், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது. அதன்படி கடந்த 2016ம் ஆண்டு முதல் சரக்கு வாகனங்களுக்கு வேக கட்டுப்பாடு கருவி ெபாருத்துவது கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டது. இதேபோல் பள்ளி, கல்லூரி வாகனங்களுக்கும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டியது கட்டாயம். இதுதவிர பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு வேக கட்டுப்பாடு கருவிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வாகனங்களை எப்சி செய்ய கொண்டு செல்லப்படும்போது, வேக கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டுள்ளதா? என்பதை பரிசோதித்தே எப்சி செய்யப்படுகிறது.