×

விவசாயிகள் சிட்டா, அடங்கல் பெற சிறப்பு முகாம்

வேலூர், நவ.8: வேலூர், காட்பாடி தாலுகா அலுவலகங்களில் விவசாயிகள் சிட்டா, அடங்கல் சான்று பெற சிறப்பு முகாம் நேற்று நடந்தது.  வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் அரசின் நலத்திட்டங்கள், வங்கிக்கடன் மற்றும் இதர பயன்பாட்டிற்காகவும் சிட்டா மற்றும் அடங்கல் தேவைப்படுகிறது. இதற்காக விவசாயிகள் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு தனித்தனியே சென்று விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட சிட்டா, அடங்கல் வழங்கும் சிறப்பு முகாம் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் நவம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 தாலுகா அலுவலகங்களில் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. காட்பாடி தாலுகா அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் வருவாய் துறையினர் மற்றும் வேளாண் அதிகாரிகள் சான்றிதழ்களை சரி பார்த்தனர். பின்னர், விவசாயிகளுக்கு சான்றிதழ்களை தாசில்தார் வழங்கினார். இதேபோல், வேலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணமுத்து தலைமையில் சிறப்பு முகாம் நடந்தது. வேலூர், காட்பாடி அலுவலகத்தில் நடந்த சிறப்பு முகாமில் ஏராளமான விவசாயிகள் சான்றிதழ்களை பெற்றனர்.

Tags : Farmers Chitta ,Special Camp for Acquisition ,
× RELATED கிராமத்திற்குள் நுழைந்த 6 காட்டு...