ஜிப்மர் செவிலியர் கல்லூரியில் குழந்தை பராமரிப்பு பயிற்சி பட்டறை

புதுச்சேரி, நவ. 8:  புதுச்சேரி ஜிப்மர் செவிலியர் கல்லூரியில் `பிறந்த குழந்தை பராமரிப்பில் செவிலியர் திறன்’ என்ற தலைப்பில் 3வது மாநில அளவிலான பயிற்சி பட்டறை நேற்று நடந்தது. செவிலியர் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) குமாரி வரவேற்றார். ஜிப்மர் டீன் (கல்வி) பங்கஜ் குந்த்ரா வாழ்த்துரை வழங்கினார். அவர் பிரசவ அறையில் பிறந்த குழந்தைகளின் சுவாச முதலுதவி செவிலியரின் முக்கியத்துவம் குறித்து பேசினார். ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராகேஷ் அகர்வால் தலைமை தாங்கி பேசியதாவது: ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 3 கோடிக்கு அதிகமான குழந்தைகள் பிறக்கின்றன. குழந்தை பிறப்பு என்பது சாதாரணமான உடற்கூறு நிகழ்ச்சி என்றாலும், இதில் நோயாளிகளிடம் அதிகம் இருக்கும் செவிலியர் பங்கு மருத்துவரைவிட வலிமை வாய்ந்தது என்றார். ஜிப்மர் குழந்தை மருத்துவம் மற்றும் செவிலியர் துறை வல்லுநர்கள் இவ்விழா கருப்பொருள் பற்றி செய்முறை பயிற்சியுடன் விரிவுரை வழங்கினர். ஜிப்மர் செவிலியர் கல்லூரி ஆசிரியர்கள், முதுநிலை மாணவ, மாணவிகள், செவிலியர்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மற்ற செவிலிய கல்லூரி ஆசிரியர்கள், செவிலியர்கள் என 50  பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் 7 மணி நேரம் பயிற்சி புள்ளிகள் சிறப்பு சலுகையாக அளிக்கப்பட்டது. உதவி பேராசிரியர் வெற்றிச்செல்வி நன்றி கூறினார்.

Related Stories: