புதுச்சேரி, நவ. 8: மக்கள் நீதி மய்யம் சார்பில் நம்மவர், கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கந்தப்பா வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கட்சியின் கொடி ஏற்றி, நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். அதன்பின்னர் 65 பேர் ரத்ததானம் வழங்கும் பணியையும், புதுச்சேரி முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணியையும் துவக்கி வைத்தார். பொதுச் செயலாளர் பேராசிரியர் எ.மு.ராஜன், இணை பொதுச் செயலாளர் தேசிய நல்லாசிரியர் ப.முருகேசன், பொருளாளர் வழக்குரைஞர் தாமோ.தமிழரசன், செயலாளர்கள் எம்.அரிகிருஷ்ணன், நிர்மலா சுந்தரமூர்த்தி, ஏ.கே.நேரு, ராம.ஐயப்பன், ஆர்.சந்திரமோகன், ஜே.பிராங்கிளின் பிரான்சுவா, மலர்விழி (எ) சுந்தராம்பாள் வாசுதேவன் மற்றும் எல்.கே.சதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் நிருபர்களிடம் கூறுகையில்:
நம்மவரின் பிறந்தநாளை முன்னிட்டு உயிர்காக்கும் உன்னத செயலாக மய்யத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் 65 பேர் இரத்த தானம் வழங்குகின்றோம். இப்பணியை நிர்வாகிகளுடன் நான் தொடங்கி வைத்துள்ளேன்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும், இழந்த பசுமையை மீட்கும் வகையிலும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 22 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கியுள்ளோம். அனைத்து மரங்களையும் ஆண்டு முழுவதும் தொடர்ந்து நட்டு முடிக்க உள்ளோம். நடிகர் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனை முழு மனதுடன் வரவேற்கிறோம். அதேசமயம் திரைத்துறையில் அனைத்து பிரிவுகளிலும் சாதனை புரிந்துள்ள நம்மவர் கமல்ஹாசனுக்கும் விருது வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். ஏனென்றால் நம்மவர் கமல்ஹாசன் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என திரைத்துறையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் முத்திரை பதித்துள்ளார். எனவே நம்மவர் கமல்ஹாசனுக்கு திரைத்துறை அனைத்து பிரிவுக்குமான சாதனை விருதை மத்திய அரசு அறிவித்து வழங்கினால், மிகப் பொருத்தமாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் ஊழல் அரசு நடைபெற்றுக் கொண்டுள்ளது. முதல்வருக்கும், துணை நிலைa ஆளுனருக்கும் இடையே பனிப்போர் நடைபெற்றுக் கொண்டுள்ளது. புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைத்தவிர இந்த அரசைப்பற்றி வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.