தியாகதுருகம், நவ. 8: தியாகதுருகம் அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் ஊருக்கு நடுவில் இருக்கும் கழிவுநீர் குட்டையால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தியாகதுருகம் ஒன்றியம் கண்டாச்சிமங்கலம் கிராமத்தில் 15 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கழிவுநீர் குட்டைக்கு அருகாமையில் வசித்து வருகின்றனர். இதில் தேங்கியுள்ள கழிவுநீரால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் இந்த குட்டையில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மாசுபடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஊருக்கு நடுவே இந்த கழிவுநீர் குட்டை உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கழிவுநீர் குட்டையில் உற்பத்தியாகும் கொசுக்களால் இப்பகுதி மக்கள் பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குடியிருப்புகளில் சுற்றித்திரியும் 20க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு இந்த குட்டை புகலிடமாக உள்ளது.எனவே இந்த குட்டையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.