கள்ளக்குறிச்சி, நவ. 8: கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் சார் ஆட்சியர் காந்த் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி பேசுகையில் கள்ளக்குறிச்சி நகராட்சி குப்பைகள் அனைத்தும் சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. இப்பிரச்னையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி கோட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத அரசு மற்றும் தனியார் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகிய நீர்பிடிப்பு இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. எனவே அதனை தடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி அரசு போக்குவரத்து பணிமனையில் டீலக்ஸ் என்ற பெயரில் கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் கூடுதலாக ரூ.25 கட்டணம் வசூல் செய்கின்றனர். இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றார்.