தூத்துக்குடியில் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

தூத்துக்குடி, நவ.8:தூத்துக்குடியில் ஆக்கிரமித்துள்ளவர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென தூத்துக்குடி மாநகராட்சி அறிவித்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெயசீலன் விடுத்த செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகை மற்றும் வாகனங்களினால் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையோரப் பகுதிகளில் காணப்படும் பலரது ஆக்கிரமிப்பின் காரணமாக பொதுமக்கள் நடப்பதற்குக்கூட போதுமான இடவசதியின்றி சாலையின் மையப் பகுதியினை பயன்படுத்தும் சூழ்நிலை உள்ளது. இதனால் தேவையற்ற விபத்துக்கள் ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இப்பிரச்னையினை ஒழுங்குபடுத்தும் விதமாக மாநகராட்சி சார்பில் ஆக்கிரமிப்புதாரர்களுக்கு முறையாக அறிவிப்பு அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கால அவகாசம் வழங்கப்பட்டது.  

இந்நிலையில் மாநகரின் பிரதான பகுதிகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை தாமாக அகற்ற முன்வராத ஆக்கிரமிப்புகள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் மூலம் அகற்றப்பட்டது.

இதில் 231 கடைகள், வீடுகள், அலுவலகங்கள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான 2 கிணறுகள் ஆகியவை ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த பணி வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், தொடர்ச்சியாக நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்புதாரர்கள் ஆக்கிரமிப்புகளை உடனடியாக தாமாக முன்வந்து அகற்ற தெரிவிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் மாநகராட்சியால் அப்புறப்படுத்துவதோடு அதற்கான செலவினத்தின் இருமடங்கு தொகையினை ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: