சாத்தான்குளம், நவ. 8: சாத்தான்குளம் அருகே ஆசீர்வாதபுரத்தில் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி சார்பில் டெங்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது. தலைமை வகித்த தலைமையாசிரியர் மாணிக்கம், பேரணியைத் துவக்கிவைத்தார். அறிவியல் ஆசிரியர் டேனியல் வரவேற்றார். இதையடுத்து பள்ளியில் இருந்து புறப்பட்ட சைக்கிள் பேரணி ஆசீர்வாதபுரம், குருகால்பேரி, பெருமாள்குளம், சாலைப்புதூர், பேய்க்குளம் பஜார் வழியாக சென்றது. இதில் பங்கேற்ற மாணவர்கள், செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் வழங்கினர். இதையடுத்து முனைஞ்சிப்பட்டி சாலை வழியாக புனித லூக்கா மருத்துவமனை வரை சென்ற பேரணி பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், தேசிய பசுமைப்படை மாணவர்கள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியரும், தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியர் அரிமா டேனியல் மற்றும் பசுமைப்படை மாணவர்கள் செய்திருந்தனர்.