மேட்டூர் காவிரிக்கரையில் பாசிப்படலம் மீது நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி

மேட்டூர், நவ.8: மேட்டூர் நீர் தேக்கபகுதியில் காவிரியில் ஏற்பட்டுள்ள துர்நாற்றத்தை போக்க பாசிப்படலங்கள் மீது நுண்ணுயிர் கலவை தெளிக்கும் பணி நேற்று துவங்கியது. மேட்டூர் நீர் தேக்கப்பகுதி காவிரியில் ரசாயன கழிவுகள் கலந்துள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், காவிரி கரையோர குடியிருப்புகளில் வசிக்க முடியாமல், பொதுமக்கள் அவதியடைந்தனர். மேலும், பலர் கிராமங்களிலிருந்து வெளியேறி தங்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி, அதிகாரிகளிடம் நேற்று முன்தினம் கிராம மக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், முதல்கட்டமாக பண்ணவாடி பரிசல்துறை பகுதியில் படர்ந்திருக்கும் பாசி படலங்கள் மீது திறனூட்டப்பட்ட நுண்ணுயிர் கலவையை பரிசலில் சென்று தெளித்தனர். இதனால், நன்மை செய்யும் நுண்ணுயிரி பல்மடங்கு பெருகி, ஆல்கோ எனும் பாசிகளை கட்டுப்படுத்தி துர்நாற்றத்தை குறைந்து காவிரி நீர் தூய்மையாக மாறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஒருவாரத்திற்கு இப்பணி காவிரி கரை முழுவதும் நடைபெறும் என்று கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராமநாதன் தெரிவித்தார்.     

Related Stories: