சேலம், நவ.8: ரேஷன் கடை தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய நாளைய தினம், 13 கிராமங்களில் குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டம் தொடர்பாக ரேஷன் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம் போன்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நாளில் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் வட்டங்கள் வாரியாக நடத்தப்படுகிறது. இதன்படி நடப்பு மாதத்திற்கு நாளை (9ம் தேதி) 13 வட்டங்களில் தலா ஒரு கிராமத்தில் சிறப்பு குறைதீர் கூட்டம் நடக்கிறது. சேலம் வட்டத்தில் வளையக்காரனூரிலும், சேலம் மேற்கு வட்டத்தில் பெத்தானூரிலும், சேலம் தெற்கு வட்டத்தில் வேம்படிதாளத்திலும், வாழப்பாடி வட்டத்தில் பெரியகுட்டிமடுவிலும், ஏற்காடு வட்டத்தில் அரண்மனைக்காடு கிராமத்திலும் நடத்தப்படுகிறது.