ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மச்சாவு

ஒரத்தநாடு, நவ. 8: ஒரத்தநாடு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் கிராமம் கீழத்தெருவில் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா மேலசிருத்து கிராமத்தை சேர்ந்த மூர்த்தி (55) என்பவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் 4ம் தேதியில் இருந்து மூர்த்தி காணாமல் போனார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை ஒக்கநாடு கீழையூர் அரசு நீரேற்று நிலையம் கட்டிடத்தில் இறந்து கிடந்த தகவல் ஒரத்தநாடு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக மூர்த்தி அதிகளவு மது அருந்தி மன உளைச்சலில் இருந்ததாகவும், மர்மசாவு குறித்து விசாரிக்க வேண்டுமென மூர்த்தி மனைவி பாண்டிமுத்து தெரிவித்தார்.ஏற்கனவே மூர்த்திக்கும் அப்பகுதியில் வசிக்கும் மற்றொரு ஆடு மேய்க்கும் தொழிலாளிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.இதுகுறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் மூர்த்தி மர்மச்சாவு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: