திருவையாறு, நவ. 8: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (51). பனையூர் அரசு டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் மதியம் தஞ்சை டெப்போவில் டிரைவராக பணிபுரிந்து வந்த கரந்தை சருக்கை வேலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது வேலை பணியிடை நீக்கம் தொடர்பான விசாரணைக்காக கும்பகோணம் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.இவர்களுடன் திருவையாறை சேர்ந்த டியூட்டி கிளார்க் ஜாகீர் உசேன், மணிகண்டன் சித்தப்பாவும் சென்றனர். விசாரணை முடிந்து இரவு 7.30 மணியளவில் திருவையாறு தேரடி வந்தனர். பின்னர் வீட்டுக்கு ஜாகீர் உசேன் சென்று விட்டார். இதையடுத்து அலெக்சாண்டரை மணிகண்டன் மற்றும் சிலர் அழைத்து சென்று மது குடித்தனர். பின்னர் மணிகண்டன் மற்றும் திருச்சோற்றுத்துறையை சேர்ந்த அய்யப்பன் உதவியுடன் அலெக்சாண்டரை அழைத்து வந்து அவரது வீட்டு வராண்டாவில் படுக்க வைத்து விட்டு சென்றுவிட்டனர்.