திருவையாறு அருகே அரசு பஸ் கண்டக்டர் மர்மச்சாவால் பரபரப்பு

திருவையாறு, நவ. 8: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த விளாங்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (51). பனையூர் அரசு டெப்போவில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். இவரை நேற்று முன்தினம் மதியம் தஞ்சை டெப்போவில் டிரைவராக பணிபுரிந்து வந்த கரந்தை சருக்கை வேலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது வேலை பணியிடை நீக்கம் தொடர்பான விசாரணைக்காக கும்பகோணம் தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.இவர்களுடன் திருவையாறை சேர்ந்த டியூட்டி கிளார்க் ஜாகீர் உசேன், மணிகண்டன் சித்தப்பாவும் சென்றனர். விசாரணை முடிந்து இரவு 7.30 மணியளவில் திருவையாறு தேரடி வந்தனர். பின்னர் வீட்டுக்கு ஜாகீர் உசேன் சென்று விட்டார். இதையடுத்து அலெக்சாண்டரை மணிகண்டன் மற்றும் சிலர் அழைத்து சென்று மது குடித்தனர். பின்னர் மணிகண்டன் மற்றும் திருச்சோற்றுத்துறையை சேர்ந்த அய்யப்பன் உதவியுடன் அலெக்சாண்டரை அழைத்து வந்து அவரது வீட்டு வராண்டாவில் படுக்க வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

நள்ளிரவு 12 மணியளவில் அலெக்சாண்டருக்கு காது, மூக்கில் ரத்தம் வந்தது. பின்னர் மூச்சி விட முடியாமல் திணறி கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனையில் அவரது மனைவி அனிதாமேரி சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து திருவையாறு போலீசில் அலெக்சாண்டர் மனைவி அனிதாமேரி புகார் செய்தார். அதில் தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாக தெரிவித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிந்து அலெக்சாண்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மதுபோதையில் பைக்கில் இருந்து விழுந்து காயம் ஏற்பட்டு அலெக்சாண்டர் இறந்தாரா அல்லது அவரை யாராவது தாக்கினார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: