கூட்டுறவு வாரவிழாவையொட்டி பேச்சு, கட்டுரை போட்டி

ஈரோடு, நவ. 8: கூட்டுறவு வாரவிழாவையொட்டி ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகள் நேற்று நடந்தது. இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி நடந்தது. போட்டியின் துவக்க விழா நிகழ்ச்சிக்கு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார். இதில், உயர்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவுகளுக்கிடையே கூட்டுறவு வலுப்படுத்துதல் என்ற தலைப்பிலும், மேல்நிலைப்பள்ளி அளவில் இளைஞர், மகளிர் மற்றும் நலிவுற்றோருக்கான கூட்டுறவுகள் என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் கூட்டுறவுகள் வாயிலாக அரசின் புதிய முயற்சிகள் என்ற தலைப்பிலும் போட்டி நடத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உயர்நிலைப்பள்ளி அளவில் கூட்டுறவுகள் மூலம் நிதிசேர்ப்பு, தொழில்நுட்பம் மற்றும் கணினிமயமாக்கல் என்ற தலைப்பிலும், மேல்நிலைப்பள்ளி அளவில் ஊரக கூட்டுறவுகள் மூலம் புதிய முயற்சிகள் என்ற தலைப்பிலும், கல்லூரி அளவில் கூட்டுறவுகள் இயல்விக்கும் சட்டம் என்ற தலைப்பிலும் கட்டுரை போட்டி நடத்தப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முதல் மூன்று இடங்களை பெறும் மாணவ, மாணவியருக்கு வரும் 16ம்தேதி நடைபெற உள்ள கூட்டுறவு வாரவிழாவில் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: