குழந்தைகள் தின போட்டி பரிசளிப்பு விழா சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு கலெக்டர் பேச்சு

தூத்துக்குடி, நவ.7: தூத்துக்குடியில் நடந்த குழந்தைகள் தினவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு கேடயம் வழங்கிய கலெக்டர் சந்தீப்நந்தூரி, சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதை உணர்ந்து முழு ஈடுபட்டுடன் கல்வியினை கற்றுத்தர வேண்டும் என்றார். தூத்துக்குடி மாவட்ட நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கம் சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கலை இலக்கிய திறன் போட்டிகள் நடந்தது. மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சாயர்புரம் ஜாய்சரோன் பள்ளி முதல்பரிசும், கலைவாணி நர்சரி பள்ளி 2வது பரிசும், பேரூரணி ஜானகிஅம்மாள் பள்ளி 3வது பரிசும் பெற்றன. வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற பள்ளிகளுக்கு கேடயம், சிறப்பு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்து பேச்சு, கலை இலக்கிய திறன், ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வென்ற பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கேடயங்களை வழங்கி பேசியதாவது, நமது மாவட்டத்தில் நர்சரி, பிரைமரி பள்ளிகள் சங்கம் சார்பாக குழந்தைகள் தினவிழா முன்கூட்டியே நடத்தப்பட்டது. விழாவில் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு போட்டிகளில் 53 பள்ளிகளை சேர்ந்த சுமார் 21,000 மாணவ, மாணவிகளுக்கு பங்கேற்று வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வியுடன் நற்பண்புகளை கற்றுத்தர வேண்டும். மாணவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வளர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். விளையாட்டிலும் மாணவர்கள் நல்ல நிலையை அடையவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் ஊக்கப்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை திறன் போட்டியில் பங்ேகற்க ஊக்குவிக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே பல்வேறு போட்டிகளில் பங்கேற்றால்தான் எதிர்காலத்தில் பயமின்றி தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற முடியும்.

வீட்டில் பெற்றோர்கள் பாதுகாப்பு அளிப்பதுபோல் குழந்தைகளுக்கு பள்ளிகளில் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நீண்டநாள் விடுப்பில் இருந்தால் அந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் விடுப்புக்கான காரணத்தை அறியவேண்டும். பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும். சமுதாயத்தில் சிறந்த மாணவர்களை உருவாக்குவது ஆசிரியர்களின் பொறுப்பு என்பதை உணர்ந்து முழு ஈடுபட்டுடன் கல்வியினை கற்றுத்தர வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி டி.எஸ்.பி.பிரகாஷ், மாவட்ட கல்வி அலுவவர் வசந்தா, வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன், தூத்துக்குடி மாவட்ட நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் சங்கம் தலைவர் சங்கரலிங்கம், துணை தலைவர் ராஜசேகரன், செயலாளர் ஜோசேப், பொருளாளர் ஜாய் பெல் ப்ராங், ஆலோசகர் சுயம்புலிங்கம், அசோகன் ஜாண்சன் பள்ளி முதல்வர் ஜீவானா கோல்டி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: