உத்திரமேரூர், நவ.6: உத்திரமேரூர் அருகே அரசாணிமங்கலம் கிராமத்தில் கழிவுநீருடன் கலந்து வரும் குடிநீரால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தில் 1000க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்கு, அதே கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைத்து, அதில் இருந்து பைப்லைன் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோல் வினியோகம் செய்யும் பைப்லைன்களை முறையாக பராமரிக்கவில்லை. இதனால், குழாய்களில் அங்காங்கே உடைப்பு ஏற்பட்டு குடிநீர்ருடன் கழிவுநீர் கலந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேலும், இதுபற்றி பலமுறை புகார் செய்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்து மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர்.