×

பட்டாசு ஆலையில் வெடி விபத்து 2 பெண்கள் உட்பட 3 பேர் காயம்

சிவகாசி, அக். 23:  சிவகாசி அருகே, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் காயமடைந்தனர். சிவகாசியைச் சேர்ந்தவர் அதிரூபன் (55). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை, சிவகாசி அருகே நதிக்குடியில் உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில், பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்து வருகின்றனர். நேற்று பேன்சி ரக பட்டாசுகளை சாக்கில் கட்டி இழுத்து சென்றபோது, உராய்வு ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து தீப்பிடித்தது.  தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில், திருவேங்கிடபுரத்தை சேர்ந்த கணேசன் (35), எஸ்.கொடிக்குளம் பரமசிவம் மனைவி சுதா (33), ஆலங்குளம் ராஜூ மனைவி முருகசரஸ்வதி (35) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...