மேலூர், அக். 23: மேலூர் அருகே கோட்டநத்தம்பட்டி அரசுப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு, உலக மக்கள் தொகை பெருக்க பாதிப்பு, மரக்கன்று நடும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வெள்ளலூர் வட்டார மருத்துவ அலுவலர் அம்பல சிவநேசன் தலைமை தாங்கினார். மதுரை குடும்ப நலத்துறை அதிகாரி கவுரி முன்னிலை வகித்தார். டாக்டர் கவுரி மற்றும் பள்ளி துணை தலைமை ஆசிரியர் சாந்தி கலந்து கொண்டனர்.
டெங்கு விழிப்புணர்வு குறித்தும், உலக மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் மாணவ, மாணவியரிடம் விளக்கி கூறப்பட்டது. இத் தலைப்புகளில் மாணவர்களிடம் நடைபெற்ற பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களில் தேர்தெடுக்கப்பட்ட சிலரை தூய்மை தூதுவராக நியமிக்கப்பட்டனர். இவர்களின் சிறந்து விளங்கும் மாணவர்களை அடுத்த மாதம் தேர்தெடுத்து பரிசுகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அறிவித்தது. இத்துடன் பள்ளி வளாகம் முழுவதும் மாணவர்களை கொண்டு மரக்கன்றுகள் நடப்பட்டது. இதை சிறப்பாக வளர்ப்பவர்களுக்கும் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.