×

உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அரசு ஊழியர், ஆசிரியர்களின் விவரங்களை கருவூலம் பெற கோரிக்கை

மதுரை, அக். 23: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை கருவூலம் பெற வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாராளுமன்ற தேர்தல் பணிக்கான விவரங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் பெறப்பட்டன. ஆனால் பல பள்ளி மற்றும் அலுவலகங்களில் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை, பெயர் பட்டியலில் சேர்க்காமல் கொடுக்கப்பட்ட விவரம் பின்பு தெரிய வந்தது. இதன் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முடியாமல் உண்மையிலேயே, சரியான காரணங்கள் இருந்தும், பலர் அவதிப்பட்டனர். இன்னும் பலர் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆனாளானர்கள்.

மேலும், பல பள்ளிகளில் ஒரு சிலருக்கு மட்டுமே ேதர்தல் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் பல பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிபுரியும் அனைவருக்குமே தேர்தல் பணி வழங்கப்பட்டது. சில பள்ளிகள், அலுவலகங்களில் எந்தவொரு பணியாளருக்கும் தேர்தல் பணி கொடுக்கப்பட வில்லை.எனவே, இதனை தவிர்க்கும் பொருட்டு, விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை கருவூலம் மூலம் பெற்று, அதன் மூலம் எந்தவொரு பணியாளரும் விடுபடாமல் (தகுந்த காரணங்கள் உள்ளவர்களை தவிர) பாரபட்சமின்றி, தேர்தல் பணி ஒதுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Tags : servants ,elections ,teachers ,
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...