பழநி, அக். 23: பழநி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் டெங்கு, மர்மக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் டெங்கு, மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பழநியில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பழநி அரசு மருத்துவமனையில் பிரத்யேக காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பழநி 13வது வார்டை சேர்ந்த கணேசன் மகள் துர்காதேவி (14) என்ற சிறுமி தொடர் காய்ச்சல் காரணமாக பழநி அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரின் ரத்தத்தை பரிசோதித்த போது டெங்கு அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே டெங்கு பாதிப்பிற்குள்ளான சிறுமி வசிக்கும் பகுதிகளில் நேற்று பழநி சப்கலெக்டர் உமா, மாவட்ட பூச்சியியல் வல்லுனர் காசிம்முஸ்தபா, சுகாதார மேற்பார்வையாளர் அப்துல் வகாப், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஸ்வரி சுகாதார பணிகளை முடுக்கி விட்டனர்.ஒவ்வொரு வீடுகளில் சேகரித்து வைத்துள்ள தண்ணீரில் கொசுப்புழுக்கள் உள்ளனவா என ஆய்வு செய்தனர். புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் வீடுகள் முன்பு தண்ணீர் தேங்காமல் வைத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பழநி பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்