மருத்துவமனைக்கு சென்ற போது விபத்து கார் மீது லாரி மோதி 3 மாத குழந்தை பலி

சேலம், அக்.23: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை நல்லனம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்(27). இவரது மனைவி லதா(24). இவர்களுக்கு தீபிகா(7) என்ற மகள் உள்ள நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு நேற்றிரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சீலநாய்க்கன்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்து, ரஞ்சித் பணியாற்றி வரும் ஜவுளி நிறுன உரிமையாளரான தங்கவேலின் மகன் பிரவீன்(22) என்பவரது காரில் புறப்பட்டனர். ரஞ்சித், லதா, தீபிகா மற்றும் 3 மாத பெண் குழந்தையுடன், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரவீன்(24) ஆகியோர் சேலம் நோக்கி வந்தனர். சித்தர் கோயில் அருகே திருமலைகிரி என்னுமிடத்தில் வந்தபோது, கோதுமை மாவு ஏற்றி வந்த லாரி மீது, கார் வேகமாக மோதியது. இதில் காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்தனர். 3 மாத பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, படுகாயமடைந்த ரஞ்சித், லதா, தீபிகா, பிரவீன், மற்றொரு பிரவீன் ஆகிய 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இரும்பாலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: