மேட்டூர், அக்.23: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 3வது முறையாக 120 அடியை எட்டும் நிலையில், நேற்றிரவு உபரிநீர் போக்கி பகுதியில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி அதிகரித்தது. அன்று மாலை விநாடிக்கு 27,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. இதனால், அன்றைய தினம் 87.40 அடியாக இருந்த நீர்மட்டம் அதிகரித்து, நடப்பாண்டில் முதல் முறையாக செப்டம்பர் 7ம் தேதி மதியம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து, நீரவரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்ததால் சரிந்து வந்த நீர்மட்டம், மீண்டும் செப்டம்பர் 23ம் தேதி இரவு 120 அடியானது. தொடர்ந்து 5 நாட்கள் 120 அடியாக தம் கட்டிய நீர்மட்டம் 30ம் தேதி 119.84 அடியாக குறைந்தது. அன்று முதல் படிப்படியாக சரிந்து வந்த நீர்மட்டம் 3.10.19ம் தேதி 118.82 அடியாக சரிந்த நிலையில், மறுநாள் 4ம் தேதி முதல் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. ஆனால், பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறப்பால் நீர்மட்டம் சரிந்து வந்தது. 10ம் தேதி அணையின் நீர்மட்டம் 116.73 அடியாக இருந்த நிலையில், நீர்வரத்து விநாடிக்கு 18,672 கனஅடியானது. தொடர்ந்து நீர்வரத்து சரிவால் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வந்தது. 12ம் தேதி 115.67 அடியாக இருந்த நீர்மட்டம் 14ம் தேதி 114.40 அடியாகவும், மறுநாள்(15ம் தேதி) 113.78 அடியாகவும் சரிந்தது.