திருச்சி வங்கி கொள்ளை வழக்கு கஸ்டடி வேண்டாம் நீதிபதியிடம் சுரேஷ் கதறல் இன்று மீண்டும் விசாரணை

திருச்சி, அக். 23: திருச்சி வங்கி கொள்ளை தொடர்பாக சுரேஷிடம் விசாரிக்க 7 நாள் கஸ்டடி கேட்ட மாவட்ட போலீசாரின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மன உளைச்சலில் இருப்பதாகவும், கஸ்டடி போக விருப்பமில்லை என சுரேஷ் கதறியதால் விசாரணையை நீதிபதி இன்று ஒத்திவைத்தார்.திருச்சி நகைகடையில் கடந்த 2ம் தேதி அதிகாலையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக, கொள்ளை கும்பல் தலைவன் முருகன், சுரேஷ், கூட்டாளிகள் கணேஷ், சுரேஷின் தாயார் கனகவல்லி, மணகண்டன், ராதாகிருஷ்ணன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை கும்பல் தலைவன் முருகனை காவலில் எடுத்த பெங்களூரு போலீசார், தமிழகம் அழைத்து வந்து திருவெறும்பூர் காவிரிகரையில் புதைத்து வைத்திருந்த 12 கிலோ நகைகளை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து, முருகனை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் சுரேசை கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை 7 நாட்கள் கஸ்டடி திருச்சி மாநகர போலீசார் கஸ்டடி எடுத்து விசாரித்தனர். இந்நிலையில் சுரேசின் போலீஸ் கஸ்டடி நேற்று முன்தினம் முடிந்ததை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதால் கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் முடிவெடுத்தனர்.

இது குறித்து சுரேஷிடம் விசாரணை நடத்த 7 நாள் கஸ்டடி கேட்ட நம்பர் 1 டோல்கேட் போலீசாரின் மனு நேற்று ரங்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்காக சுரேசை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சிவகாமிசுந்தரியிடம், கண்ணீர் விட்டு கதறிய சுரேஷ், மாநகர போலீசார் கஸ்டடி நேற்று (நேற்று முன்தினம்)தான் முடிந்தது. இதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்ட நான் தற்போது மன உளைச்சலில் உள்ளேன். இந்நிலையில் மாவட்ட போலீசாரின் கஸ்டடிக்கு போக விருப்பமில்லை என்றார். இதை கேட்ட நீதிபதி மனு விசாரணையை நாளை (இன்று) ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Related Stories: