முந்தி செல்வதில் போட்டா போட்டி லாரி மீது ஆம்னி பஸ் மோதி டிரைவர் உள்பட 3 பேர் காயம்

திருச்சி, அக்.23: திருச்சியில் முந்தி செல்வதில் ஏற்பட்ட போட்டா போட்டியில் லாரி மீது ஆம்னி பஸ் மோதி டிரைவர் உள்பட 3 பேர் காயமடைந்தனர்.சென்னையில் இருந்து மதுரையை நோக்கி 2 ஆம்னி பஸ்கள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு நேற்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு பஸ்களும் திருச்சி-மதுரை ரோட்டில் பஞ்சப்பூர் அருகே வந்தது. அதற்கு முன்னதாக தூத்துக்குடியிலிருந்து மர லோடு ஏற்றி வந்த லாரி பஞ்சப்பூர் அருகே திரும்பி அருகில் இருந்த மரக்கடை நோக்கி சென்றது. இதற்கிடையில் போட்டி போட்டுக்கொண்டு வந்த ஆம்னி பஸ்களில் ஒரு ஆம்னி பஸ் ஓவர் டேக் செய்து சென்றுவிட்டது.

மற்றொரு ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மரம் ஏற்றி சென்ற லாரியின் பின்னால் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த தில்லை சுப்பிரமணி(40), முருகன்(50) ஆகியோர் காயத்துடனும், பஸ் டிரைவர் நெல்லையை சேர்ந்த ராஜேஷ் (29) படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: