தஞ்சை, அக். 23: தஞ்சையில் ஆற்றில் குதித்த பொறியியல் பட்டதாரி வாலிபர் உடலை 2வது நாளாக தீயணைப்பு படையினர் தேடினர். தஞ்சை சுந்தரம் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (32). பொறியியல் பட்டதாரியான இவர் புதிய கட்டிடங்களுக்கு வரைபடம் வரைந்து கொடுக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் வீட்டிலிருந்து புறப்பட்டு தஞ்சை வண்ணாரப்பேட்டை கல்லணை கால்வாய் புதிய பாலத்தில் பைக்கை நிறுத்தினார். பின்னர் திடீரென தடுப்புசுவரில் ஏறிய அவர் ஆற்றில் குதித்துள்ளார். அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் கார்த்திக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திக்கை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரமாகிவிட்டது. இதையடுத்து 2வது நாளாக நேற்று காலை முதல் மீண்டும் கார்த்திக் உடலை தேடும் பணியை தீயணைப்பு படையினர் மேற்கொண்டனர். எனினும் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. கார்த்திக் எதற்காக ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.