×

வன மரபியல்துறை சார்பில் மரம் வளர்ப்பு கருத்தரங்கம், கண்காட்சி விவசாயிகள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், அக். 23: ஜெயங்கொண்டத்தில வன மரபியல்துறை சார்பில் மரம் வளர்ப்பு கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.கரூர் தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம், கோவை வன மரபியல் மற்றும் மரபு நிறுவனம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மரம் வளர்ப்பு பற்றிய கருத்தரங்கம் மற்றும் விவசாயிகளுக்கான கண்காட்சி நடந்தது. கண்காட்சியை கோவை வனச்சரக இயக்குனர் முருகேசன் தலைமை வகித்து துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித தொழிற்சாலை நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், பொது மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் மரம் வளர்ப்பு சாகுபடி குறித்து விளக்கம் அளித்து பேசினர்.திருச்சி உள்ளிட்ட வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் சவுக்கு, தைலமரம், மலைவேம்பு உள்ளிட்ட பல மரங்கள் வளர்ப்பது குறித்த முக்கியத்துவம், விவசாயத்திற்கு தேவையான ஆலோசனை, தொழில்நுட்ப உதவிகளை வழங்கி பேசினர். முகாமில் வனத்துறை அலுவலர்கள், மலர் சாகுபடியாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக பல்வேறு துறைகளை சேர்ந்த விவசாய கருவிகள், இடுபொருட்கள், மரக்கன்று வகைகள், விதைகள் ஆகியவை கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டிருந்தது. இதை விவசாயிகள் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான இடுபொருட்களை வாங்கினர். நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன், வனச்சரக அலுவலர் குமார், வனவர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கோவை வன விரிவாக்க தலைவர் ராஜேஷ் கோபாலன் வரவேற்றார். இறுதியில் உதவி தொழில்நுட்ப அலுவலர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.



Tags : Tree Planting Seminar ,Forest Heritage Department ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது