×

தோகைமலை வாரச்சந்தையில் ஆபத்தான நிலையில் பழமை வாய்ந்த கிணறு

தோகைமலை, அக். 23: கரூர் மாவட்டம் தோகைமலையில் உள்ள வார சந்தை பகுதியில் 40 அடி ஆழத்தில் பழமைவாய்ந்த கிணறு உள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தோகைமலையில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருந்து வந்தது.
இந்நிலையில் போதிய மழையின்மையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து இக்கிணற்றில் தண்ணீர் வற்றியது. இதனால் சுற்றுபகுதிகளில் இருந்து பல்வேறு கழிவு பொருட்களை கொட்டும் குப்பை கிடங்காக மாறி விட்டது.மேலும் இந்த கிணறு அருகே சுமார் 20 மீட்டர் தொலைவில் மிக அருகில் அரசு அங்கன்வாடி மையமும், அரசு பள்ளி விடுதியும் உள்ளதால் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழலில் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். இதனால் பழமை வாய்ந்த கிணற்றை தூர்வாரி கிணற்றுக்கு மேல் பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இக்கிணற்றில் தூர்வாரப்பட்டது. ஆனால் அதன்பின்பு இதுவரை கிணற்றுக்கு பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்காமல் அப்படியே விட்டு உள்ளனர். தற்போது வாரசந்தைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருவதால் கிராவல் மண் அமைத்து தரையை உயர்த்தி உள்ளனர்.இதனால் தரையில் இருந்து 2 அடி உயரத்தில் கிணற்றிற்கான சுற்றுசுவர் உள்ளதால் பொதுமக்களுக்கும், குழந்தைகள், மாணவர்கள், கால்நடைகளுக்கு ஆபத்தான நிலையில் கிணறு உள்ளது என்று தெரிவிக்கின்றனர். கவே தோகைமலை வாரசந்தையில் உள்ள கிணற்றிற்கு பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags : Dokhamali Weekend ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா