கோவை, அக். 23:கோவை ரயில்நிலையத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, ரயில்வே துறை இணைந்து தூய்மை இயக்க பிரசாரம் மற்றும் சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்த கலைநிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் சுற்றுலாவின் முக்கியத்துவம், சுற்றுலா தலங்களை பாதுகாத்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கலைக்குழுக்களின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில், பாரம்பரிய நினைவிடங்களின் பாதுகாப்பு, ஆண், பெண் சமத்துவம், சுற்றுலா தொழில் முனைவோர்களை மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் நாடகம், தப்பாட்டம், பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.