கோவை மாவட்டத்தில் ரெட் அலார்ட் கோவையில் மழை பெய்யாததால் அதிகாரிகள்,பொதுமக்கள் நிம்மதி

கோவை, அக். 23:கோவை மாவட்டத்திற்கு மழை காரணமாக நேற்று ரெட் அலார்ட் விடப்பட்டு இருந்த நிலையில், மழை பெய்யாத காரணத்தினால் பொதுமக்கள், அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் 22ம் தேதி (நேற்று) மிக அதிகமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து ரெட் அலர்ட் அறிவித்தது. அதன்படி, 21 செ.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை முதல் கோவை மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால், கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழை பெய்யவில்லை.

கோவையின் சுற்று வட்டார பகுதிகளில் காலை நேரத்தில் சாரல் மழையும், மதியத்திற்கு மேல் லேசான மழையும் பெய்தது. மேலும், மாநகரில் ஒரு சில இடங்களில் மாலையில் மழை பெய்தது. இந்த மழையினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ரெட் அலர்ட் விடப்பட்டு இருந்த நிலையில், மழை பெய்யாத காரணத்தினால் அதிகாரிகள், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

Related Stories: