ஈரோடு, அக். 23: ஈரோடு மாநகராட்சியில் நேற்று டெங்கு கொசுப்புழு தொடர்பாக கலெக்டர் தலைமையில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது டெங்கு கொசுப்புழுக்கள் இருந்தது கண்டறியப்பட்டு 3 வீடுகளில் குடிநீர் இணைப்புகளை துண்டிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் தொடர்ந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகள், வணிக வளாகங்களில் அதிகாரிகள் குழுவினர் சென்று அங்கு கொசுப்புழுக்கள் உருவாகும் வகையில் காரணிகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.இதுதுவிர, கலெக்டர் கதிரவன் தினமும் மாநகராட்சி பகுதிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று ஈரோடு மாநகராட்சி 4வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசுப்புழு தடுப்பு ஆய்வு நடந்தது. இந்த ஆய்விற்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.