கள்ளக்குறிச்சி, அக். 23: கள்ளக்குறிச்சி அடுத்த மோகூர் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 4 பேரில் ஒவ்வொருவராக சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது. எனவே மோகூர் கிராமத்தில் சிறப்பு சிகிச்சை முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மோகூர் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதார பணிகள் துணை இயக்குநர் ஜெமினி மேற்பார்வையில் மேலூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் தலைமையில் மோகூர் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் டாக்டர் இளங்கோவன் மற்றும் செவிலியர்கள் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை வழங்கி சிகிச்சை அளித்தனர்.