×

தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை, தடுப்பூசி போடும் பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி, அக். 23:    கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் அதிகரித்து
வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், வெறிபிடித்த நாய்களை கண்டறிந்து தடுப்பு ஊசி போட நடவடிக்கை எடுக்க வேண்டியும் நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் பலமுறை வலியுறுத்தினர். இதையடுத்து கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் சையத்முஸ்தபாகமால் உத்தரவின் பேரில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் சென்னையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களை கொண்டு தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் திண்டிவனம் நகராட்சிக்கு சொந்தமான நாய் பிடிக்கும் வாகனத்தில் முதல் நாளான நேற்று கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித் திரிந்த 50 நாய்களை பிடித்து கள்ளக்குறிச்சி கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள நாய் பராமரிப்பு அறையில் அடைத்து வைத்தனர். பின்னர் ஒவ்வொரு நாய்க்கும் கால்நடை மருத்துவர் சொக்கலிங்கம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தார். மேலும் தெருவில் சுற்றித் திரியும் வெறிநாய்களை கண்டறிந்து அதனை பிடித்து தடுப்பு ஊசிகள் போடப்பட்டன. மேலும் தொடர்ந்து 2 வாரத்திற்கு கள்ளக்குறிச்சி பகுதியில் சுற்றித் திரிகின்ற தெரு நாய்களை பிடித்து கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்களுக்கு தடுப்பு ஊசி போடும் பணி நடைபெறும் என்று நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை