ஆறுமுகநேரி, அக். 23: ஆத்தூரில் இருந்து புன்னக்காயல் செல்லும் சாலையில் சேர்ந்தபூ மங்கலம் கிராமம் உள்ளது. இங்கு சாலையோரம் இருந்துவந்த பழமையான அரசமரம் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் அவ்வழியாக சென்ற மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதையடுத்து மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனிடையே ஆத்தூர்- புன்னக்காயலுக்கு செல்லும் சாலையும் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்லாமல் அவதிப்பட்டனர். மேலும் புன்னக்காயலுக்கு இந்த ஒரு வழிச்சாலை மட்டுமே உள்ளதால் வாகனங்கள் இயக்கமும் முடங்கிப் போனது. காலை 11 மணியளவில் மரத்தை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகே போக்குவரத்து சரியானது. இருப்பினும் நீண்ட நேரமாக மின்சாரம் இல்லாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினர். இருப்பினும் அதிகாலையில் மரம் சாய்ந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.