×

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் ஊராட்சி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காத அதிகாரி

ஸ்ரீபெரும்புதூர், அக்.23: ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி செயலாளர்கள், பணியாளர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பளம் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், பணத்தை முறையாக வழங்காததால், சுகாதார பணிளையும் செய்ய முடியவில்லை என ஊழியர்கள் புலம்புகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 58 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் இருங்காட்டுகோட்டை, மண்ணூர், மாகாண்யம், பால்நல்லூர் உள்பட 8 ஊராட்சிகளை தவிர 50 ஊராட்சிகளில், ஊராட்சி செயலர்கள் பணியில் உள்ளனர். தற்போது உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கபட்டுள்ளது. இதனால் ஊராட்சி பணிகளை ஊராட்சி செயலர்கள் மூலம் செயல்படுத்தபடுகிறது. இதேபோல் ஒவ்வொரு ஊராட்சியிலும் துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள் என 5 முதல் 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்கள் மாத இறுதியில் அல்லது முதல் வாரத்தில் சம்பளம் வழங்க வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட வேண்டும்.

அதன் பிறகே ஊராட்சி செயலர்கள், ஊழியர்கள் தங்கள் சம்பளத்தை வங்கியில் எடுக்க முடியும். தற்போது ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு, சம்பளம் வழங்காமல் பெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்  இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டுகின்றனர். இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் மற்றும் ஊழியர்கள் கூறுகையில், ஊராட்சியின் வரவு, செலவு கணக்கு மற்றும் வளர்ச்சி பணிகளை ஊராட்சி செயலர்களே செய்கின்றனர். ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள், குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் பணியில் உள்ளனர். ஒரு சில ஊராட்சிகளில் பன்னாட்டு தனியார் தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

அக்கமாபுரம், ஓஎம் மங்கலம், கோட்டூர், சிவபுரம், மேல்மதுரமங்கலம், ஏகனாபுரம், குண்டுபெரும்பேடு, கிளாய் உள்பட 30க்கும் மேற்படட் ஊராட்சிகளில் வருவாய் குறைவாக உள்ளது. இதனால் மேற்கண்ட ஊராட்சி செயலர்களுக்கு ஓராண்டாக சம்பளம் வழங்கவில்லை. தற்போது ஊராட்சி செயலர்களுக்கு மாத இறுதியில் அல்லது மாத முதல் வாரத்தில் சம்பளம் வழங்க, வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட வேண்டும். ஆனால் கடந்த மாத சம்பளத்தை வழங்காமல் பிடிஓ வேல்முருகன் இழுத்தடிக்கிறார். இதனால் எங்கள் நிலை மோசமாகி வருகிறது என்றனர். மேலும், கிராமங்களில் தற்போது, சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சுகாதார பணிகள் செலவுக்கு கூட காசோலையில் கையெழுத்து போடுவதில்லை. இதனால் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி செய்ய முடியாமல் உள்ளது என்றனர்.

Tags : officer ,panchayat workers ,Sriperumbudur Union ,
× RELATED மக்களவை தேர்தலில் வாக்களிக்க...