பில்லி சூனியம் வைத்திருப்பதாக கூறிய சாமியாரின் பேச்சை நம்பி 20 அடி பள்ளம் தோண்டியவரின் வீடு பூமிக்குள் புதைந்தது: டி.பி.சத்திரத்தில் பரபரப்பு

கீழ்ப்பாக்கம்: டி.பி.சத்திரம், கே.வி.என் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் மைதிலி (40), இவரது கணவர் கடந்த ஓராண்டாக உடல் நலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்து வந்தார். மைதிலி, ஒரு சாமியாரை சந்தித்து, தனது கணவரின் நிலை குறித்து கூறினார். அதற்கு அந்த சாமியார், உனது குடும்பத்திற்கு வேண்டாதவர்கள் யாரோ சூனியம் வைத்துள்ளனர். சூனிய தகடு உன் வீட்டின் உள்ளே 20 அடி தூரத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அதை வெளியில் எடுத்து தீயில் கொளுத்தினால் தான் உங்கள் குடும்பம் நன்றாக இருக்கும் என்றார். அதை உண்மை என்று நம்பிய மைதிலி, தகடை எடுக்க எவ்வளவு செலவாகும் என்று கேட்டுள்ளார். அதற்கு சாமியார், ஒரு குறிப்பிட்ட தொகையை கேட்டார். அதற்கு மைதிலி சம்மதித்துள்ளார். பின்பு வீட்டில் 4 கூலி ஆட்கள் உதவியுடன் தகடை எடுக்க குழி தோண்ட ஆரம்பித்தார்.

அவ்வாறு குழி தோண்டியதால் கிடைத்த மணலை வீட்டைச் சுற்றி மூட்டைபோல் கட்டி குவித்து வைத்தார். 20 அடி தோண்டியும் எந்த தகடும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆர்டிஓ நித்தியலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அவர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அதன் பிறகு மைதிலியும் அவரது குடும்பத்தினரும் வீட்டை காலி செய்துவிட்டு வேறு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் தற்போது சென்னையில் பருவமழை பெய்துவருவதால் மைதிலியின் வீடு நேற்று   திடீரென இடிந்து பூமிக்குள் புதைந்துவிட்டது. இதை அறிந்த சென்னை மாநகராட்சி 8வது மண்டல அதிகாரிகள் விரைந்து வந்து பள்ளத்தை மணல் கொட்டி மூடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: