திருச்சி, அக்.18: திருச்சி மாநகரில் காவல்துறை சார்பிலும், வர்த்தக நிறுவனங்கள் சார்பிலும் ஆங்காங்கே கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையிலும், தினமும் செயின் பறிப்பு சம்பவங்கள் குறையவில்லை. நகரில் பைக்கில் வந்து செயின் பறிக்கும் கும்பல் தினமும் கைவரிசை காட்டிக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு 9 மணி முதல் 11 மணி வரை திருச்சி மாநகரையே ஒரு வழிப்பறி கும்பல் பரபரப்புக்குள்ளாக்கியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த தில்லைநகரில் இரவு 9 மணிக்கு 3 பேர் ஒரே பைக்கில் வந்தனர். பைக் ஓட்டியவர் ஹெல்மட் அணிந்திருந்தார் மற்றவர்கள் ஹெல்மட் அணியவில்லை. இவர்கள் தனியாக செல்லும் பெண்களிடம் தில்லைநகரில் 9 மணிக்கே செயின் பறிக்க முயன்றனர். பெண்கள் கூச்சல் போட்டதால் செயினை பறிக்காமல் தப்பினர். பின்னர் தில்லைநகரில் இருந்து உழவர்சந்தை மைதானம் வழியாக திருச்சி ஜி.ஹெச் சாலைக்கு வந்து அங்கும் 2 பெண்களிடம் செயின் பறிக்க முயன்றனர். அவர்களும் கூச்சல் போட்டதால் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் உஷாரானதால் செயினை பறிக்காமல் உறையூர் பகுதிக்கு சென்றனர்.