துறையூர் அருகே வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு

துறையூர், அக்.18: துறையூர் அருகே கொப்பம்பட்டியில் வீடு புகுந்து 12 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துறையூர் அருகே கொப்பம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ்(42). இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 16ம் தேதி காலை அம்பிகா ராசிபுரத்தில் உள்ள ஒரு மெட்டல் கம்பெனிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். அதன் பின்னர் செல்வராஜ் வீட்டைப் பூட்டிவிட்டு அதே ஊரில் வசிக்கும் தனது அக்கா ஜெயமணியை தம்மம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த செயின், வளையல், நெக்லஸ், கை செயின், மோதிரம் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் திருடு போனது தெரியவந்தது. இதுபற்றி செல்வராஜ் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: