சங்ககிரி அருகே சிஎஸ்ஐ ஆயர் வீட்டு வாசலில் ரத்தம் கிடந்ததால் பரபரப்பு

சேலம், அக். 18: சங்ககிரி அருகே சிஎஸ்ஐ ஆயர் வீட்டு வாசலில் மனித ரத்தம் கொட்டிக் கிடந்தது. கொள்ளையடிக்க வந்த ஆசாமியின் ரத்தமா? என்பது  குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய எடப்பாடி ரோட்டில் சிஎஸ்ஐ நட்டானியல் நினைவாலயம் உள்ளது. இங்கு ஈரோட்டை சேர்ந்த ஜான் ரவிக்குமார்(43) கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆயராக பணியாற்றி வருகிறார். கோவில் வளாகத்தில் அவரது வீடு மற்றும் நர்சரி பள்ளி உள்ளது. ஆயர் ஜான் ரவிக்குமார், எடப்பாடியில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்தின் ஆயராகவும் இருந்து வருவதால், அடுத்த மாதம் அறுப்பின் பண்டிகை நடைபெற இருக்கிறது. இதற்காக சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பதற்காக நேற்றுமுன்தினம் சேலம் வந்தார். இரவு வீடு திரும்பிய அவர், டயோசியேசன் தேர்தல் தொடர்பாக சந்திக்க வந்த நிர்வாகிகளுடன் பேசினார். பின்னர் இரவு தூங்க சென்றார்.

நேற்று காலை 6.30 மணிக்கு வீட்டின் கதவை அவரது மனைவி ஆஷா திறந்து வெளியே வந்தார். வீட்டு வாசலில் கிடந்த ரத்தத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். ரத்ததின் மீது மனிதனின் கால் தடமும் பதிந்திருந்தது. இந்த தகவல் அவ்வூர் முழுவதும் பரவியது. பொதுமக்கள் அங்கு கூடினர். சங்ககிரி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அங்கு கிடந்தது மனித ரத்தம் தான் என்பதை உறுதி செய்தனர். மேலும் அங்கிருந்த இட்லிக்கடைக்கார மூதாட்டியிடம் விசாரித்தபோது, அதிகாலை நேரத்தில் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி ஒருவர் வெளியே குதித்ததாகவும், தான் கேட்டபோது, வெளியே சொன்னால் ெகான்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறினார். காம்பவுண்ட் சுவரிலும் ரத்தக்கறை இருந்தது. இதுகுறித்து டிஎஸ்.பி.தங்கவேல் கூறுகையில், வீட்டு காம்பவுண்டில் பீங்கான் பதிக்கப்பட்டுள்ளது. அதில் ரத்தக்கறை உள்ளது. எனவே திருட வந்த ஆசாமியின் ரத்தமாக இருக்கலாம். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: