பத்மவாணி மகளிர் கல்லூரியில் சர்வதேச தமிழ் கருத்தரங்கம்

ஓமலூர், அக்.18:  சேலம் பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் செயல்பட்டு வரும் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், இலக்கண இலக்கியங்களில் வாழ்வியல் கூறுதல் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார். தமிழ்த்துறை தலைவர் பழனியம்மாள் வரவேற்றார். பெரியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசுகையில், ‘சுமார் 2600 ஆண்டுக்கு முன்பு உலகின் முதல் தமிழ் சங்கம் கீழடியில் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், ஆய்வுகள் செய்யும்போது முதல் சங்கம் இருந்ததும், தமிழின் பாரம்பரியங்களும், கலாச்சாரங்களும் முழுமையாக அறிவியல் ரீதியாக கண்டறியப்படும். இதை மத்திய, மாநில அரசுகளும் தமிழ் ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகளில் இடை சங்கம், கடை சங்கம் நடைபெற்றது தெரிய வரும்,’ என்றார்.

தொடர்ந்து சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழக இலக்கிய திறனாய்வாளர் மற்றும் விரிவுரையாளர் ஸ்ரீலட்சுமி கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழகத்தில் தமிழின் மீதான பற்று அதிகமாக உள்ளதாக கூறினார். இதையடுத்து, கல்லூரி நிர்வாக அலுவலர் முத்துக்குமார், கல்லூரி முதல்வர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்த கருத்தரங்கில் உலகம் முழுவதிலுமிருந்தும் தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தமிழாய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

Related Stories: