×

நிலத்தகராறில் முதியவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி, அக்.18: நிலத்தகராறில் முதியவரை கொன்ற வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மோரனஅள்ளியைச் சேர்ந்தவர் புட்டப்பன் (82). விவசாயி. அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் குப்பன் (65), கோவிந்தன் (61), பிரபு (31), சக்திவேல் (27), சுந்தரி (60). இவர்கள் அனைவரும் உறவினர்கள். புட்டப்பனுக்கும், குப்பன் தரப்பினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.இந்நிலையில் கடந்த 28.1.2016 அன்று ஏற்பட்ட தகராறில் புட்டப்பனை கட்டை, அரிவாள், கல் உள்ளிட்ட ஆயுதங்களால் குப்பன் தரப்பினர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த புட்டப்பன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இக்கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் விசாரித்து குப்பன், கோவிந்தன், பிரபு, சக்திவேல், சுந்தரி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி கோவிந்தன், சுந்தரி ஆகிய 2 பேருக்கும் தலா ஆயுள் தண்டனையும், ₹10 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும், குப்பன், பிரபு, சக்திவேல் ஆகியோருக்கு 2 பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ₹12 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் அரசு வக்கீல் பாஸ்கர் ஆஜராகி வாதாடினார்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்