×

பருவமழை எதிரொலி வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உஷார்

தேவாரம், அக்.18: தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், கால்வாய்கள், குளங்கள் போன்றவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆர்.ஐக்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையினால் விவசாய பயிர்கள் சேதம், வீடுகள் சேதம், அணைகள், கால்வாய்கள், ஆறுகளில் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தாசில்தார்கள், சப்-கலெக்டர்கள், ஆர்டிஓக்கள் போன்றவர்களுக்கு மழைக்கால தடுப்பு பணிகள் பற்றி கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருக்கவும், ஏதாவது சேதம் ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், ``வடகிழக்கு பருவமழை வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கிவிட்டதால் பயிர்சேதம், உயிர்சேதம் ஏற்படாமல் இருக்க தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான அறிவுரைகள் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.



Tags : Fire Department ,
× RELATED நத்தம் அப்பாஸ்புரம் பள்ளியில் தீ தடுப்பு செயல் விளக்கம்