தேனி, அக். 18: தேனியில் தனியார் மசாலா கம்பெனியில் 2410 டன் எடையுள்ள 19 வகையான மசாலா பொருட்கள் எரிந்து நாசமானதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.தேனி அருகே போடி சாலையோரம் தனியார் மசாலா கம்பெனி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு நாள் பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. இதில் தனியார் கம்பெனியின் ஏசி குடோனும் உள்ளே இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களும் முழுமையாக நாசமானது. உள்ளே எரிந்து சாம்பலான பொருட்களின் விவரங்கள் குறித்து தகவல்கள் திரட்டும் பணி இரண்டு நாட்கள் நடந்தது. அதன் பின்னர், கம்பெனி சார்பில் ஜெகதீஸ்வரன் என்பவர் புகார் கொடுத்தார். இந்த புகார் மனுவில், குடோனுக்குள் பிரியாணி இலை, வத்தல், பட்டை, கிராம்பு, மல்லி, சீரகம், சோம்பு, வெந்தயம், வெள்ளைப்பூடு, சுக்கு, கடுகு, ஜாதிப்பத்திரி, ஜாதிக்காய், உலர்த்தப்பட்ட மாங்காய், புதினா, சீரகம், புளி, அன்னாசிப்பூ, மஞ்சள் ஆகிய 19 வகையான பொருட்கள் 2410 டன் இருப்பு இருந்தது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் ஆகும். அத்தனையும் எரிந்து சாம்பலானது எனக்கூறியுள்ளார். பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.