மதுரை காமராஜர் பல்கலை. கல்லூரிகளுக்கு இடையிலான தடகளப்போட்டியில் சாதனை தங்கம் வென்ற தேனி அரசுக்கல்லூரி மாணவர்
மதுரை, அக். 18:மதுரை காமராஜர்பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தடகள போட்டியில் மாணவ, மாணவிகள் சாதனை படைத்தனர். தேனி அரசுக்கல்லூரி மாணவர் தங்கம் வென்றார்.மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான தடகள விளையாட்டுப்போட்டி நேற்று துவங்கியது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த காமராஜர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 90 கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. இப்போட்டியை பதிவாளர் சுதா துவக்கி வைத்தார். பல்கலைக்கழக உடற்கல்வித்துறைத்தலைவர் சந்திரசேகரன், பேராசியர் மற்றும் இயக்குனர் ஜெயவீரபாண்டியன் முன்னிலை வகித்தனர். நேற்று நடந்த 5000மீ., ஓட்டப்பந்தயத்தில் சிவகாசி கல்லூரியை சேர்ந்த குணாலன் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவு பந்தயத்தில் மதுரை லேடிடோக் கல்லூரி மாணவி சிந்து முதலிடம் பெற்றார். ஆண்களுக்கான 400மீ., ஓட்டப்பந்தயத்தில் தேனி அரசுக்கல்லூரி மாணவர் சேகர் முதலிடம் பெற்றார். பெண்கள் பிரிவில் லேடிடோக் கல்லூரியை சேர்ந்த ப்ரியா முதல் இடம் பெற்றார். பெண்களுக்களுக்கான ஈட்டி எறிதலில் விவிவி கல்லூரி வீராங்கனை காஞ்சனாதேவி, உயரம் தாண்டுதலில் பாண்டிசெல்வி மற்றும் நீளம் தாண்டுதலில் ஜிடிஎன் கல்லூரி வீராங்கனை மோனிகா முதலிடம் பெற்றார். இன்றும் போட்டி நடைபெறுகிறது.