செல்போனில் பேசி கொண்டே சென்றபோது ஆற்றில் தவறி விழுந்த வாலிபர் மாயம்

கும்பகோணம். அக்.18: செல்போனில் பேசி கொண்டே நடந்து சென்றபோது ஆற்றில் விழுந்த வாலிபர் மாயமானார். கும்பகோணம் அடுத்த ஆடுதுறை வீரசோழன் ஆற்றில் புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதையடுத்து இலகுரக வாகனம் மற்றும் பாதசாரிகள் நடந்து செல்வதற்காக அதன் அருகில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. வீரசோழன் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் தரைபாலத்தில் ஒரு பகுதி உள்வாங்கி இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தரைபாலத்தில் செல்போன் பேசி கொண்டு நடந்து சென்றார். அப்போது ஆற்றில் தவறி விழுந்தார். இதையடுத்து அவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து தேடி வருகின்றனர். திருவிடைமருதூர் தாசில்தார் சிவக்குமார் மற்றும் போலீசார் வந்து விசாரித்ததில் நரசிங்கன்பேட்டை சேர்ந்த கலியபெருமாள் என்பது தெரியவந்தது.

Related Stories: