டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான வங்கி, வணிக நிறுவனங்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதிப்பு அதிகாரிகள் அதிரடி

கும்பகோணம், அக்.18: கும்பகோணம் பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரூ.53 ஆயிரம் அபராதத்தை அதிகாரிகள் விதித்தனர். கும்பகோணம் பகுதியில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதையடுத்து டெங்கு நோய் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அதன்படி கும்பகோணம் திருநாராயணபுரம் சாலை, காந்தி நகர் உள்ளிட்ட பகுதியில் நகராட்சியின் நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாக்கியராஜ், மணிகண்டன், பாலசுப்ரமணியன் உள்ளிட்ட நகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள், பள்ளிகள், வங்கிகள், பழைய இரும்பு கடை, ஹோட்டல், பெட்டிக்கடை, டயர் பஞ்சர் கடையில் சோதனை நடத்தினர். இதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவான நிலையில் சுகாதார கேடுகளுடன் கூடிய அரசுடமையாக்கப்பட்ட வங்கி, ஓட்டல்கள், பழைய இரும்பு கடைகளுக்கு ரூ.53 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுகுறித்து நகர்நல அலுவலர் பிரேமா கூறுகையில், டெங்கு நோய் பராவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை நகராட்சி எடுத்து வருகிறது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏதுவாக சுகாதார கேடுகளுடன் உள்ள கடைகள் சீல் வைக்கப்படும். மேலும் அந்த கடையின் உரிமத்தை ரத்து செய்து அபராதம் வசூலிக்கப்படும் என்றார்.

Related Stories: